Tuesday, June 1, 2010

மகரிஷி அகஸ்தியர்


பிரம்மரிஷி வசிஷ்டரும் , மகரிஷி அகஸ்தியரும் வருணபகவான் மூலமாக விழுந்த விதையிலிருந்து தோன்றினார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன . சாஸ்திரங்கள், வேதங்கள் , யோகா ஆகியவற்றில் திறமைசாலியான அகஸ்தியர் தர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்று சொல்லலாம் . அகஸ்தியர் சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர். சிவபெருமானை நினைத்து தவமிருந்தார் . அகஸ்தியருடைய தவத்தைக் கண்டு மெச்சிய சிவபெருமான் அவர் முன் தோன்றி லிங்கமாக உறைந்தார் . இன்று மக்கள் அந்த சிவலிங்கத்தை அகஸ்தியேஸ்வர் என்று அழைக்கிறார்கள் .

மகரிஷி அகஸ்தியர் விஷ்வாமித்திரருக்கு சகல வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். விதர்ப்ப நாட்டு இளவரசி லோபமுத்ராவை மணந்து கொண்டார். அழகையும் அறிவையும் கொண்ட லோபமுத்ரா அகஸ்தியர் தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அகஸ்தியர் லோபமுத்ரா தம்பதியர் குஞ்ச மலைத்தொடரை விட்டு தென் மாநிலத்தை நோக்கிப் பயணத்தை தொடர்ந்தார்கள் . அதன்பிறகு தெற்கு திசை ஆகாயத்தில் நட்சத்திரமாகத் தோன்றினார்கள் என்று புராணங்கள் சொல்லுகின்றன . அகஸ்தியரின் சிறப்பைப் பற்றி அகஸ்திய புராணம் சொல்கின்றது. தமிழ் இலக்கணத்தை கண்டெடுத்த தொல்காப்பியர் மகரிஷி அகஸ்தியரின் சிஷ்யன் என்று சொல்லலாம். அகஸ்தியர் இந்திரனுக்கும் மரூத்தனுக்கும் இடையே இருந்த மனபேதத்தை தீர்த்து வைத்தார். சமுத்திரத்திலிருந்து தோன்றிய காலன் என்ற அரக்கன் முனிவர்களையும், ரிஷிகளையும் கொன்று வந்தான். அகஸ்தியர் அரக்கனை அழிக்க சமுத்திரத்தையே விழுங்கினார். சூரியன், சந்திரன் சுற்றுகிற பாதையை மறைப்பதற்காக விந்திய பர்வதம் உயரமாக வளர்ந்தது . அகஸ்தியர் உயரமாக வளர்ந்த பர்வதத்தை சின்னதாக்கினார். மகரிஷி அகஸ்தியர் வாதபி என்ற அரக்கனை கொன்றார். இவரே வனவாசம் சென்ற ஸ்ரீராமருக்கு வில் , அம்பு மற்ற ஆயுதங்களையும் கொடுத்து வழி அனுப்பினார்.