Wednesday, July 7, 2010

துளசிதாசர்

1554ஆம் ஆண்டில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ராஜாபூர் என்ற இடத்தில் ஒரு பிராமணர் தம்பதியருக்கு இவர் பிறந்தார் . அவர் பிறந்தவுடனேயே அவருடைய அன்னை இறந்தார் . தன்னுடைய மனைவியின் இழப்பை தாங்க முடியாமல் அவருடைய தந்தையும் துளசிதாசரை கைவிட்டுச் சென்றார் . அதன் பிறகு அவருடைய வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த வேலைக்காரி துளசிதாசரை எடுத்து வளர்த்தாள். அவளுடைய உடல் நிலையும் பாதிக்கப்பட்டதால் துளசிதாசரின் ஐந்தாவது வயதில் வேலைக்காரியும் மரணமடைந்தாள். அதன் பிறகு நர்ஹரிநந்தாஜி என்ற வியாபாரி துளசிதாசரை எடுத்து வளர்த்து படிக்க வைத்தார் . துளசிதாசர் ஸ்வாமி ராமானந் ஆஸ்ரமத்தில் வேதங்கள் , புராணங்கள் , சாஸ்திரங்கள் ஆகியவற்றைக் கற்றுக் கொண்டார். தீனபந்து பாதக் என்பவரின் மகள் ரத்னாவளியை மணந்து கொண்டார் . துளசிதாசர் தன்னுடைய மனைவி மீது அதிகமான அன்பும் மோகமும் வைத்திருந்தார் . ஒருநாள்கூட மனைவியை விட்டுப் பிரிய மனமில்லாமல் துளசிதாசர் அவள்மீது அப்படிப்பட்ட அன்பைப் பொழிந்தார் .

திடீரென்று ஒருநாள் ரத்னாவளி அவள் பிறந்த வீட்டிற்கு சென்றாள். மனைவியின் பிரிவைத் தாளமுடியாத துளசிதாசர் அவளுடைய வீட்டிற்குச் சென்றார். அங்கு துளசிதாசரைக் கண்டு கோபம் கொண்ட ரத்னாவளி, " இப்படி தன்னுடைய சதைப் பிண்டத்தின் மீது மோகம் கொள்வதற்கு பதிலாக பகவான் ஸ்ரீராமர் மீது மோகம் கொண்டிருந்தால் நிச்சயமாக இந்த மாதிரி நிலையிலிருந்து விடுபட்டிருப்பாய்" என்று சொன்ன வார்த்தைகள் துளசிதாசரை ஆழமாக பாதித்து அவருடைய மனக்கண்களை திறந்து வைத்தது . அன்றிலிருந்து அவர் பகவான் நாமத்தை புகழ்ந்து பல நூல்களை இயற்றினார். ராமசரித்மானஸ் , வைராக்ய சாந்தி பானி , பார்வதி மங்களம் , கவிதாவளி , கீதாவளி , ஹனுமான் பஹூக் போன்ற பிரசித்தி பெற்ற நூல்களை இயற்றி இருக்கிறார் .

No comments:

Post a Comment