Wednesday, July 7, 2010

மீராபாய்

ராஜ பரம்பரையில் பிறந்த மீரா தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தாயை இழந்தாள். அதன் பிறகு தாத்தாவின் அரவணைப்பில் மீரா வளர்ந்தாள். சின்னப் பருவத்தில் தாத்தா அவளுக்கு கிருஷ்ணரின் புகழ் பாட்டை ஊட்டி வளர்த்ததால், அவள் கிருஷ்ண பரமாத்மாவை அதிகமாக நேசிக்கத் தொடங்கினாள். சித்தூரை ஆண்ட மகாராஜா போஜ்ராஜ் என்பவருக்கு மீராவை கட்டிக் கொடுத்தார் . தன்னுடைய கணவரை விட அதிகமாக நேசித்த கிருஷ்ண பரமாத்மாவை மீரா கணவராகப் பாவிக்கத் தொடங்கினாள். ஆறு வருடங்கள் கழித்து அவளுடைய கணவர் மரணமடைந்தார் . அதன் பிறகு அவருடைய சகோதரன் விக்கிரமாதித்யன் சித்தூரை ஆண்டான் . ராஜ பரம்பரையைச் சேர்ந்த மீரா சாதுக்களுடன் பகவான் நாமத்தை பாடி , ஆடிக் கொண்டிருப்பதை விரும்பாத விக்கிரமாதித்யன், அவளைத் தீர்த்துக்கட்ட பாலில் விஷத்தைக் கலந்து கொடுத்து, அதனை கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்த சரணாம்ருதம் என்று பொய் சொல்லிக் கொடுத்தான் . மீரா அந்தப் பாலை அருந்தும் போது அதனுள்ளே இருந்த விஷம் அமிர்தமாக மாறி அவளை ஒன்றும் செய்யாமலிருந்தது .

இன்னொரு முறை நல்ல பாம்பை வைத்துள்ள கூடையில் பூமாலையும், சாளக்கிராமமும் இருப்பதாகச் சொல்லி அவளுடைய அறையில் வைத்தான் . மீரா குளித்துவிட்டு அந்தக் கூடையை திறந்து பார்த்தபோது உண்மையாகவே அந்தக் கூடையில் ஒரு பூமாலையும் , சாளக்கிராமமும் இருந்தன . இத்தகைய தொல்லைகளைக் கொடுத்த விகிரமாதித்யனை விட்டு மீரா பிறந்த வீட்டிற்குச் சென்றார் . பிறகு மீரா பிருந்தாவனம் சென்றார் . அங்கு மீராஜீவ்கோஸ்வாமியை சந்தித்தார் . அங்கிருந்து த்வாரகை சென்றார் . மீரா கிருஷ்ணரை புகழ்ந்து பல பாடல்களைப் பாடினார் . அப்படி பாடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மீரா துவாரகையில் உள்ள கிருஷ்ணனோடு கலந்தாள். கிருஷ்ணரையே கணவராக எண்ணிய மீராவின் வாழ்க்கைச் சரித்திரம் என்றும் நம்முடைய மனத்தில் ஆழமாக பதிந்திருக்கிறது என்று சொல்லலாம் .

No comments:

Post a Comment