Tuesday, July 6, 2010

சாது கபீர்

ஸ்வாமி ராமானந்தின் அருளால் காசியில் வசித்துக் கொண்டிருந்த ஒரு பிராமண விதவை 14 56 ஆம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் . சமூகத்திற்கு பயந்து அந்தச் சின்னக் குழந்தையை லஹர் என்ற ஏரிக்கரையில் விட்டுவிட்டாள். அந்த வழியாக சென்று கொண்டிருந்த நெசவுத் தொழில் செய்யும் முஸ்லிம் தம்பதியர்கள் அந்தக் குழந்தையை எடுத்து வளர்த்தார்கள் . நீரு - நீமா என்ற முஸ்லிம் தம்பதியர்கள் அந்தக் குழந்தைக்கு கபீர் என்று பெயர் சூட்டினார்கள் . முஸ்லிமாக இருந்தாலும் கபீர் தன்னுடைய சின்ன வயதிலே நெற்றியில் திலகத்தை இட்டுக் கொண்டு பகவான் ஸ்ரீராமரின் நாமத்தைப் பாடிப் பரவசமானார் . சின்ன வயதிலேயே பகவானைப் பற்றி உரையாடல்கள் நிகழ்த்தினார். ஸ்ரீராமரின் வரலாற்றுப் பெருமையை பஜனை வடிவமாக பாடி மகிழ்ந்தார் .

கபீர் தன்னுடைய குருவான ஸ்வாமி ராமானந்துக்கு சிலை எழுப்பினார் . கபீர் பாகந்த் வைராகி என்பவற்றின் மகளான லோணியை மணந்து கொண்டார் . லோனி பார்ப்பதற்கு அழகாகவும், விவேகம் நிறைந்தவளவாகவும் தோன்றினாள். இந்த தம்பதியர் கமால் என்ற ஆண் குழந்தையையும் , கமாலி என்ற பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்கள் . 1505 ஆம் ஆண்டில் காசியில் கபீர் மோட்ச பிராப்தி அடைந்தார் . அவருடைய சவத்தை இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் எரிக்க ஆசைப்பட்டார்கள் . ஆனால் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர்கள் அவருடைய சவத்தைப் புதைக்க விரும்பினார்கள் . திடீரென்று அப்போது காற்று வீசியதால் அவருடைய சவத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த போர்வை விலகியதால் அங்கு சவத்திற்கு பதிலாக பூக்கள் கிடந்ததை பார்த்து இரு மதத்தினர்கள் ஆச்சர்யத்தில் மூழ்கினார்கள் . இந்துக்கள் ஒரு பாதி பூக்களை காசியில் சாஸ்திரங்கள் முறைப்படி ஈமக்கடன்களைச் செய்தார்கள் . அதுபோல முஸ்லிம்கள் மற்ற பாதி பூக்களைப் புதைத்தார்கள். கபீர் படிக்காதவராக இருந்தாலும் பல நூல்களை இயற்றினார் . ஆதிகிரந்தம் , பிரம்ம நிருபன் , ஷப்தாவளி போன்ற புகழ் பெற்ற நூல்களை இயற்றினார்.

1 comment: